பரமத்தி வேலூர், பாண்டமங்கலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


பரமத்தி வேலூர், பாண்டமங்கலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2019 9:30 PM GMT (Updated: 10 Jan 2019 8:08 PM GMT)

பரமத்தி வேலூர் மற்றும் பாண்டமங்கலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூர், 

பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் நகர வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பரமத்தியில் உள்ள மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி ஹசின்பானு ஆகியோர் கலந்துகொண்டு பேசியதாவது:- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள், கால்நடைகள், வனவிலங்குகள் என அனைத்து தரப்பும் பாதிப்புக்குள்ளாகிறது. அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாக்கும் கடமை உள்ளது. பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கிடைப்பதால் கண்ட இடங்களில் வீசுகின்றனர். அதனை கால்நடைகள் சாப்பிட்டவுடன் பிளாஸ்டிக் பொருட்கள் மூச்சுக்குழாயில் அடைத்து மூச்சுவிட முடியாமல் இறக்கின்றன. எனவே பிற்கால தலைமுறைகளுக்காக பிளாஸ்டிக்கை ஒழிக்க வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், பரமத்தி அரசு வக்கீல் கேசவன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், படைவீடு செயல் அலுவலர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் வக்கீல்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாண்டமங்கலம் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ஹசின்பானு, வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியன், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் கீதா நன்றி கூறினார்.

Next Story