மும்பையில் 3-வது நாளாக நீடித்த வேலை நிறுத்தம் ஒரு பெஸ்ட் பஸ் கூட ஓடவில்லை போக்குவரத்து நிர்வாகம் மீது பயணிகள் அதிருப்தி


மும்பையில் 3-வது நாளாக நீடித்த வேலை நிறுத்தம் ஒரு பெஸ்ட் பஸ் கூட ஓடவில்லை போக்குவரத்து நிர்வாகம் மீது பயணிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 10 Jan 2019 11:30 PM GMT (Updated: 10 Jan 2019 10:29 PM GMT)

மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்றும் நீடித்தது. ஒரு பெஸ்ட் பஸ் கூட ஓடாததால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மும்பை, 

நாட்டின் நிதிநகரமான மும்பையில் 80 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வரும் புறநகர் மின்சார ரெயில் சேவைக்கு அடுத்தபடியாக பொது போக்குவரத்து சேவையை பெஸ்ட் குழுமம் வழங்கி வருகிறது.

பெஸ்ட் குழுமம் இயக்கி வரும் பஸ் சேவைகளை சுமார் 25 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். சம்பள உயர்வு, நஷ்டத்தில் இயங்கும் பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் பஸ் ஊழியர்கள் 32 ஆயிரம் பேர் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்தனர்.

பேச்சுவார்த்தை

தொழிற்சாலை கோர்ட்டு பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவித்தது. பெஸ்ட் நிர்வாகம் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பெஸ்ட் ஊழியர் யூனியன் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் சிவசேனாவின் காம்கார் சேனா யூனியனை சேர்ந்த ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினார்கள். இருப்பினும் அதிக உறுப்பினர்களை கொண்ட சசாங்க் ராவ் தலைமையிலான யூனியனை சேர்ந்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை.

ஊழியர்களுக்கு நோட்டீஸ்

இதன் காரணமாக வழக்கமாக இயங்கும் 3,300 பஸ்களில் நேற்று முன்தினம் வெறும் 11 பஸ்கள் மட்டுமே இயங்கியதாக தெரியவந்தது. மற்ற பஸ்கள் அனைத்தும் டெப்போக்களில் ஓய்வில் இருந்தன. தொடர்ந்து 2 நாட்களாக நகரில் பஸ் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் பெரிதும் பரிதவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டனர்.

5 மடங்கு வரையிலும் அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

பணிக்கு திரும்பும்படி எச்சரித்தும் ஊழியர்கள் வராததை அடுத்து பெஸ்ட் நிர்வாகம் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் (மெஸ்மா) 350 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் 2 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெஸ்ட் ஊழியர் குடியிருப்புகளில் இருந்து காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது.

3-வது நாளாக...

இருப்பினும் ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து 3-வது நாளாக பஸ் போக்குவரத்து முடங்கி இருந்தது. நேற்று மும்பை பெருநகரத்தில் ஒரு ெபஸ்ட் பஸ் கூட ஓடவில்லை. பஸ் நிறுத்தங்கள் பயணிகள் இன்றி கிரிக்கெட் மைதானம் போல் காட்சி அளித்தன. பஸ் சேவை இல்லாமல் பயணிகள் 3-வது நாளாக அவதிக்குள்ளாயினர். பெஸ்ட் பஸ் நிர்வாகம் மீது பயணிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தங்களை பரிதவிக்க விட்ட நிர்வாகம் முழு தோல்வி அடைந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், குடியிருப்புகளை காலி செய்யும்படி பெஸ்ட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து பஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேற்று வடலா பஸ் டெப்போ முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

Next Story