மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகையை கொண்டாடுங்கள் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்


மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகையை கொண்டாடுங்கள் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 1:58 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகையை கொண்டாடுங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.

தர்மபுரி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப்பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் உள்ள பழைய பொருட்கள், தேவையற்ற பொருட்களை ஒன்று சேர்த்து எரிப்பது வழக்கம். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கு தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

இந்த வழக்கத்திற்கு மாறாக போகிப்பண்டிகையன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் பழைய டயர்கள், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை தீயிட்டு கொளுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு உருவாகும் நச்சுப்புகை காற்றில் கலப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்திலும் தடை ஏற்படுகிறது. பழைய மரம் மற்றும் வறட்டி ஆகியவற்றை தவிர சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிற பொருட்களை போகிப்பண்டிகையின் போது எரிக்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. எனவே போகிப்பண்டிகையன்று வீடுகள், கடைகள், தொழில்நிறுவனங்களில் குப்பையை முறைப்படி அகற்ற வேண்டும். அதன்மூலம் தர்மபுரி மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாத வகையிலும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story