புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் சுமையால் பரிதாபம்


புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் சுமையால் பரிதாபம்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:30 PM GMT (Updated: 11 Jan 2019 8:05 PM GMT)

புழல் அருகே, கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் திருமால் நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சமில் அகமது (வயது 40). இவருடைய மனைவி தபு (35). இவர்களுடைய மகள் ஜெபின்தாஜ்(6).

வேலூரை சேர்ந்த இவர்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இங்கு குடியேறினர். சமில்அகமது, புத்தகரம் வேல்முருகன் நகரில் புதிதாக செல்போன் கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டில் இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து உள்ளனர். ஆனால் நேற்று மாலை 5 மணி வரை சமில்அகமதுவின் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளரான சந்திரிகா, கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் உள்புறமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ள சமில்அகமது, அவருடைய மனைவி தபு, மகள் ஜெபின்தாஜ் 3 பேரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு மின்விசிறியில் மகள் ஜெபின்தாஜும், அதன் அருகில் உள்ள கொக்கியில் ஒரே கயிற்றில் கணவன்-மனைவியும் தூக்கில் பிணமாக தொங்கினர். முதலில் தங்கள் மகளை தூக்கில் போட்டு கொன்றுவிட்டு, பின்னர் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் கடன் சுமையால் சமில்அகமது தனது மனைவி மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story