மாநில அந்தஸ்து கோரிக்கையை கிடப்பில் போட்டுவிடக்கூடாது; சிவா எம்.எல்.ஏ. பேச்சு


மாநில அந்தஸ்து கோரிக்கையை கிடப்பில் போட்டுவிடக்கூடாது; சிவா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 8:43 PM GMT)

மாநில அந்தஸ்து கோரிக்கையை கிடப்பில் போட்டுவிடக்கூடாது என்று சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் தொகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய அலுவலக பெயர்ப்பலகையை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. முதல்முறையாக மாநில அந்தஸ்து கேட்டு பாராளுமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளோம்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடையில் ஒருசில ஆண்டுகள் காங்கிரஸ் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.

இந்த தீர்மானங்கள் மத்திய அரசுக்கு சென்றதா? அதன் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அதுபோல தற்போது டெல்லி போராட்டத்தோடு மாநில அந்தஸ்து கோரிக்கையை கிடப்பில் போட்டுவிடக்கூடாது. அடுத்தகட்டமாக என்ன செய்யவேண்டும்? என்பதை ஆலோசித்து செயல்படுத்த வேண்டும்.

புதுவயின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மாநில அந்தஸ்து பெறுவதே தீர்வாக அமையும். சர்வாதிகார, அதிகார துஷ்பிரயோக தலைமையில் இருந்து விடுபடவும், புதுவையை வளமாக மாற்றவும், மாநில அந்தஸ்துதான் தீர்வாக இருக்கும். இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து முழுவீச்சில் மாநில அந்தஸ்தை பெறவேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் சீத்தா வேதநாயகம், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, தொகுதி செயலாளர்கள் நடராஜன், பாண்டு அரிகிருஷ்ணன், கலியகார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story