ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி, விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு


ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி, விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 9:32 PM GMT)

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சூலூர்,

கோவை ராமநாதபுரம் சுப்பிரமணியம் தேவர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் ராஜமாணிக்கம் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். சூலூர் கலைமகள் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், சூலூர் விமானப்படை தளத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

கருப்பசாமி, அவருடைய மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் ராஜமாணிக்கத்திடம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.13 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். வங்கியில் கடன் பெற்று பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக அவர்கள் கூறி உள்ளனர். இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி கருப்பசாமி, ராஜமாணிக்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக்கொள்ள தனது வீட்டிற்கு வரும் படி கூறியுள்ளார்.

இதனால் ராஜமாணிக்கம், கருப்பசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராஜேஸ்வரி, அவரது தம்பி சசிக்குமார் ஆகியோர் ராஜமாணிக்கத்திடம் பணத்தை திரும்ப தர முடியாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் சசிக்குமார் அரிவாளை காட்டி ராஜமாணிக்கத்தை அச்சுறுத்தி உள்ளார்.

இது குறித்து ராஜமாணிக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி சூலூர் போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி, அவருடைய மனைவி ராஜேஸ்வரி, சசிக்குமார் ஆகிய 3 பேர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் 3 பேர் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story