அங்கன்வாடி பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது; ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


அங்கன்வாடி பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது; ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:15 PM GMT (Updated: 11 Jan 2019 10:09 PM GMT)

அங்கன்வாடி பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:–மாவட்டத்தில் 69 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 39 பணியிடங்களில் பணிபுரிவற்காக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றிய அளவிலான பணியில் இளையோராக உள்ள உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஒன்றியங்களிலிருந்து ஆசிரியர்களை பணியமர்த்த கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மீதமுள்ள 30 பணியிடங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம் பணியாளர்கள் நிமிக்கப்பட உள்ளனர்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் இருக்கும் போது அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை விட்டு ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களை தரம் இறக்குவது என்பது ஏற்க முடியாததாகும்.

தற்போதுள்ள பணி நிலையில் தரம் இறக்குவது என்பது எதிர்காலத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் நிலை ஏற்படும். கல்வித்துறை எடுத்த முடிவை கைவிட்டு வேலையில்லா, ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். மேலும் அங்கன்வாடி பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்


Next Story