மும்பையில் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 4-வது நாளாக பரிதவித்த பயணிகள் தொழிற்சங்க தலைவர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை


மும்பையில் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 4-வது நாளாக பரிதவித்த பயணிகள் தொழிற்சங்க தலைவர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:57 PM GMT (Updated: 11 Jan 2019 10:57 PM GMT)

மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மும்பை, 

மும்பையில் நஷ்டத்தில் இயங்கும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் பஸ் ஊழியர்கள் சம்பள உயர்வு, பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் மும்பை பெருநகரத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது. பயணிகள் பஸ் சேவை கிடைக்காமல் பரிதவித்தனர். ஊழியர்களை பணிக்கு திரும்ப வைக்க பெஸ்ட் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

பேச்சுவார்த்தை தோல்வி

இதையடுத்து, பெஸ்ட் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும். இல்லையெனில் ஊழியர் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மாநில அரசும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டது.

இருப்பினும் பெஸ்ட் ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை. மும்பை மாநகராட்சியை சிவசேனா அதிகாரம் செலுத்தி வரும் நிலையில், அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் பல கட்டமாக பெஸ்ட் யூனியன் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

ரூ.12 கோடி நஷ்டம்

எனவே பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நேற்றும் தொடர்ந்து 4-வது நாளாக நீடித்தது. இதனால் பெஸ்ட் பஸ் சேவையை பயன்படுத்தி வந்த லட்சக்கணக்கான பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள். அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ, டாக்சிகளில் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஏற்கனவே நஷ்டத்தில் தவிக்கும் பெஸ்ட் குழுமத்துக்கு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு தலா ரூ.3 கோடி வீதம் நேற்று வரை ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இன்று பேச்சுவார்த்தை

இதற்கிடையே, பெஸ்ட் ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி மும்பை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து தொழிற்சங்க தலைவர்களுடன் மராட்டிய அரசின் தலைமை செயலாளர் டி.கே. ஜெயின் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக மும்பை மாநகராட்சி ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அவர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தால் மாநகராட்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்படும்.

Next Story