வடபாதிமங்கலம் - மன்னார்குடி வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை


வடபாதிமங்கலம் - மன்னார்குடி வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2019 12:07 AM GMT (Updated: 12 Jan 2019 12:07 AM GMT)

வடபாதிமங்கலம் - மன்னார்குடி வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, பாலக்குறிச்சி, அரிச்சந்திரபுரம், புனவாசல், பழையனூர், நாகங்குடி, காடுவெட்டி, பண்டுதக்குடி, கொத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இவ்வாறு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மாணவர்கள் கூறியதாவது:- வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக மன்னார்குடி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் குறைவாக தான் இயக்கப்படுகின்றன. ஆதலால் தினமும் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி, புள்ளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டும் செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியுறுகின்றனர்.

வடபாதிமங்கலம்-மன்னார்குடி வழித்தடத்தில் காலையில் 7 மணியிலிருந்து 9.30 மணி வரை 2 அரசு பஸ்களும், அதேபோல் மாலையில் 4 மணியில் இருந்து 6 மணி வரையிலும் 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story