கிருஷ்ணகிரியில் 1,851 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் அசோக்குமார் எம்.பி.வழங்கினார்


கிருஷ்ணகிரியில் 1,851 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் அசோக்குமார் எம்.பி.வழங்கினார்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 4:37 PM GMT)

கிருஷ்ணகிரியில் 1,851 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை அசோக்குமார் எம்.பி. வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழை, எளிய பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்க காசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.பி. கலந்து கொண்டு 1,851 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 500 மதிப்புள்ள திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை வழங்கி பேசினார். இதில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வழங்கினார். அதில் ஒன்று கிராமப்புற ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகும். அதில் படித்த பட்டதாரி பெண்ணுக்கு திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம், தாலிக்கு 8 கிராம் தங்கமும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியத்தில் 206 பயனாளிகளுக்கும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தை சேர்ந்த 235 பயனாளிகளுக்கும், கெலமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த 203 பயனாளிகளும், மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த 243 பயனாளிகளுக்கும் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த 274 பயனாளிகளுக்கும், தளி ஒன்றியத்தை சேர்ந்த 264 பயனாளிகளுக்கும், ஊத்தங்கரை ஒன்றியத்தை சேர்ந்த 283 பயனாளிகளுக்கும், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த 143 பயனாளிகள் என மொத்தம் 1,851 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 500 மதிப்புள்ள திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் நன்றி கூறினார்.

Next Story