மங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண் மிரட்டி கற்பழிப்பு ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு


மங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண் மிரட்டி கற்பழிப்பு ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jan 2019 9:45 PM GMT (Updated: 12 Jan 2019 5:27 PM GMT)

மங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு,

மங்களூரு டவுன் ஆகாஷ்பவன் பகுதியை சேர்ந்தவர் சரண். ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆகாஷ்பவன் பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த மைனர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த சரண், மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளிேய யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் சரண், மைனர் பெண்ணை மிரட்டி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.

ரவுடிக்கு வலைவீச்சு

இதற்கிடையே வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோரிடம், மைனர் பெண் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மைனர் பெண்ணின் பெற்றோர் சரண் மீது பாண்டேஸ்வர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சரண் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பாதிக்கப்பட்ட மைனர் பெண் மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Next Story