வீட்டு முன்பு நிறுத்தி இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை


வீட்டு முன்பு நிறுத்தி இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 8:26 PM GMT)

சென்னை அமைந்தகரையில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

சென்னை,

சென்னை அமைந்தகரை பி.பி. கார்டன் பகுதியில் வசிப்பவர் திலீப் குமார் (வயது 23). கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். பின்னர், அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, அவர் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குறிப்பிட்ட தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதிகாலை 3.30 மணியளவில் ஒரு ஸ்கூட்டரில் வரும் 3 வாலிபர்கள் முதலில் மோட்டார் சைக்கிளை கண்காணிக்கிறார்கள். பிறகு, மோட்டார் சைக்கிளில் உள்ள பூட்டை உடைத்து, ஒருவர் அதை ஓட்டிச் செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன மோட்டார் சைக்கிளின் விலை ரூ.1.60 லட்சமாகும். ஏற்கனவே, இதே தெருவில் சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் திருடு போய் இருப்பதாகவும், போலீசார் கண்டுகொள்ளாததால், திருட்டு சம்பவம் தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Next Story