தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ‘புகையில்லா போகி’ விழிப்புணர்வு வாகனங்கள்


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ‘புகையில்லா போகி’ விழிப்புணர்வு வாகனங்கள்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:30 PM GMT (Updated: 12 Jan 2019 8:30 PM GMT)

பொதுமக்களிடையே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தும் விழிப்புணர்வு வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை,

கடந்த ஆண்டு போகி தினத்தன்று எரிக்கப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட அடர்ந்த புகை காரணமாக 9 பன்னாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் சென்னை விமானநிலையத்துக்கு பதில் பெங்களூரு, ஐதராபாத், கோவை விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

எனவே, சென்னை மாநகரில் போகிப்பண்டிகைக்கு முந்தைய தினம் மற்றும் போகிப்பண்டிகை நாட்களில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

பொதுமக்களிடையே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தும் விழிப்புணர்வு வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்த வாகனங்கள் 15 மண்டலங்களிலும் கையேடுகள் வழங்கியும், விளம்பர பலகை தாங்கியும், பொது அறிவிப்பு செய்தும் புகையில்லா போகி விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story