கவர்னர் மாளிகை ரப்பர் ஸ்டாம்பு அல்ல: சட்டவிதிகளின்படி தான் செயல்பட முடியும் - கிரண்பெடி பதிலடி


கவர்னர் மாளிகை ரப்பர் ஸ்டாம்பு அல்ல: சட்டவிதிகளின்படி தான் செயல்பட முடியும் - கிரண்பெடி பதிலடி
x
தினத்தந்தி 12 Jan 2019 11:30 PM GMT (Updated: 12 Jan 2019 9:26 PM GMT)

கவர்னர் மாளிகை ரப்பர் ஸ்டாம்பு அல்ல. சட்டவிதிகளின்படி தான் செயல்பட முடியும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க முடியும் என்று கவர்னர் கிரண்பெடி திட்ட வட்டமாக கூறினார். புதுவை அரசு சார்பில் அனைவருக்கும் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பினார்.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கவர்னர் கிரண்பெடி அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசை தடுத்து நிறுத்தினாலும், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் சம்பள தொகையை நிறுத்தினாலும் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கவே முதல்–அமைச்சர் நாராயணசாமி விரும்புகிறார். கடந்த 2016–ல் முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு வந்து என்னை சந்தித்தனர். அப்போது அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் மாற்றம், திட்டம், நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களில் எங்களின் கருத்தை ஏற்பீர்கள் என்று நம்புவதாக தெரிவித்தனர். அதற்கு அனைத்து விவகாரங்களும் தகுதி அடிப்படையில் நடைபெறும் என்று குறிப்பிட்டேன்.

இந்த வி‌ஷயத்தை நான் பதிவு செய்து வைத்தேன். முதல்–அமைச்சர் கவர்னர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்பினால் அதை படித்து சட்டவிதிப்படி பரிசீலிப்பேன். ஏனெனில் கவர்னர் மாளிகை ரப்பர் ஸ்டாம்பு அல்ல. அதற்கென்று பொறுப்பு உள்ளது. எதிர்பார்ப்பு, தேவைக்கு ஏற்ப பார்வையை வைப்பது தவறு. சட்டவிதிகளின்படிதான் செயல்பட முடியும்.

நான் எதற்கும் பயப்படமாட்டேன். இது முதல்–அமைச்சருக்கும் தெரியும். பயமுறுத்தும் வகையில் வார்த்தைகளை முதல்–அமைச்சர் பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோளாகவே வைக்கிறேன். பேச்சினை சரியாக கடைபிடிக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும் போதும் இதை செய்ய வேண்டும்.

முதல்–அமைச்சரின் செயல்பாடு தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன். கோப்புகள், கடிதங்களில் குறிப்புகள் மோசமாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளேன். புதுச்சேரியின் அதிக நலவாழ்வுக்காக ஞானமும், முதிர்வும் கிடைக்க முதல்–அமைச்சருக்கு எனது பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறிப்பிட்டுள்ளார்.


Next Story