குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா


குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 12 Jan 2019 11:31 PM GMT (Updated: 12 Jan 2019 11:31 PM GMT)

குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் இணைந்து பொங்கலிட்டும், மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் கோட்டார் கவிமணி தொடக்கப்பள்ளியில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி மாணவ- மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். மாணவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் வேட்டி- சட்டை அணிந்தும், மாணவிகள் பாவாடை- சட்டை அணிந்தும் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ- மாணவிகளும், ஆசிரிய- ஆசிரியைகளும் இணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு, அனைவருக்கும் பரிமாறினர். மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் அதங்கோட்டாசான் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி துணைத்தலைவர் அருள்ஜோதி தலைமை தாங்கினார். தமிழ் சங்க மாணவர் செயலாளர் தினேஷ் வரவேற்று பேசினார். நிர்வாக அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிஞர் அரங்கசாமி கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து பொங்கலிட்டனர். மேலும் உலக அமைதி, சமாதானம்- சகோதரத்துவம் ஏற்பட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது. விழாவில் கல்லூரி தமிழ்ச்சங்க பொறுப்பாளர் டால்பின்ராஜா, அலுவலக செயலாளர் சுஜின் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் ராம்குமார் நன்றி கூறினார்.

கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியிலும் நேற்று பொங்கல் விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அதிகாரி நாராயணன், பேராசிரியர்கள் நந்தினி விஜய், சுனில்ராய், ராமராஜு, சக்திகுமார், முரளதரன், ஸ்ரீலதா உள்பட மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழாவில் மாணவ-மாணவிகளும், பேராசிரியர்களும் இணைந்து மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து உறியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் அரசு தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுமஹாசன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி, முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குளச்சல் சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ,மாணவிகள் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானையில் பொங்கலிட்டு வாழ்த்துகள் பரிமாறி கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியை சகாயராணி செய்திருந்தார்.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அழகப்பபுரம் பங்கு தந்தையும், பள்ளி தாளாளருமான நெல்சன் பால்ராஜ் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பழங்கால பாரம்பரியங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பழங்கால முறையில் பொங்கலிடும் செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில் உதவி பங்குத்தந்தை மைக்கில் ராயப்பன், தலைமை ஆசிரியை மைக்கில் தெரசா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story