போகிப்பண்டிகையின் போது பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்


போகிப்பண்டிகையின் போது பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Jan 2019 9:45 PM GMT (Updated: 13 Jan 2019 4:42 PM GMT)

போகிப்பண்டிகையின் போது பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று (திங்கட்கிழமை) போகிப்பண்டிகை ஆகும்.

அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதுபோல் இந்த போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்கும் முன்பு அந்த பொருட்கள் தங்களுக்கு பயன்படாவிட்டால் மற்றவர்களுக்கு பயன்படுமா? என்பதை ஆராய்ந்து, தேவையானவர்களுக்கு வழங்கினால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

மேலும் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனம் கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம்.

இவற்றை எரிப்பதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, இதில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது.

மேலும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Next Story