மெஞ்ஞானபுரத்தில் தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மாயம் போலீசார் விசாரணை


மெஞ்ஞானபுரத்தில் தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மாயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 7:03 PM GMT)

மெஞ்ஞானபுரத்தில் தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெஞ்ஞானபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ரேனியஸ் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 45). இவருடைய மனைவி அன்புமணி (42). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சாமுவேல் திருச்செந்தூரில் உள்ள ஒரு காய்கறி கடையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் வீட்டில் கடந்த 1-ந் தேதி நகை பெட்டியில் சுமார் 40 பவுன் தங்க நகைகளை வைத்து, அந்த பெட்டியை பீரோவில் வைத்து பூட்டி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பீரோவை சாமுவேல் திறந்து பார்த்தார். அப்போது அங்கு தங்க நகைகள் வைத்து இருந்த நகை பெட்டி மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமுவேல், நகை உள்ள பெட்டியை வீடு முழுவதும் தேடிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சாமுவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெஞ்ஞானபுரத்தில் தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மாயமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story