புளியந்தோப்பில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது


புளியந்தோப்பில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 7:33 PM GMT)

புளியந்தோப்பில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தங்களை கொலை செய்ய திட்டமிட்டதால் முந்திக்கொண்டு ரவுடியை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்ற தினேஷ் (வயது 28). ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தினேஷ், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற தினேசை 6 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (25), அய்யம்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார் (23) ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பூரை சேர்ந்த கதிரவன் (28), மோனீஷ் (20), சரவணன் (24) மற்றும் கோகுல் (23) ஆகிய மேலும் 4 பேரை நேற்று அதிகாலையில் அயனாவரம் பனந்தோப்பு ரெயில்வே காலனியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

அதில், கைதான சதீஷ்குமாரின் உறவினரான பெரம்பூரைச் சேர்ந்த ராஜ் என்பவர் 2013-ம் ஆண்டு தினேசால் கொலை செய்யப்பட்டார். இதனால் சதீஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளியான கதிரவன் ஆகியோருக்கும், தினேசுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தினேஷ், சிறையில் இருந்து வெளியே சென்றதும் முதல் வேளையாக சதீஷ்குமார் மற்றும் கதிரவனை கொலை செய்ய இருப்பதாக சக கைதிகளிடம் கூறியதாக தெரிகிறது.

இதை அறிந்து கொண்ட சதீஷ்குமார், கதிரவன் இருவரும் தினேஷ் தங்களை கொலை செய்வதற்கு முன்பாக நாம் முந்திக்கொள்ள வேண்டும். சிறையில் இருந்து தினேஷ் வந்ததும் அவரை கொலை செய்துவிடவேண்டும் என திட்டமிட்டு தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேசின் நடவடிக்கைகளை கண்காணித்து நேற்று முன்தினம் இரவு அவரை தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 6 பேரிடம் இருந்தும் 3 அரிவாள்கள், அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story