நாளை பொங்கல் பண்டிகை நெல்லை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு


நாளை பொங்கல் பண்டிகை நெல்லை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 7:49 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று நெல்லை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

நெல்லை, 

தமழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளை கொண்டாடுவதற்கு பொது மக்கள் தயாராகி உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை, மண்பானைகள், பச்சரிசி, வெல்லம், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

இதையொட்டி நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், தெற்கு பஜார், மேலப்பாளையம், பேட்டை கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினார்கள். இதில் டவுன் ரதவீதிகள், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கரும்பு விற்பனை செய்ய போலீசார் தடை விதித்ததால், சீவலப்பேரி ரோட்டில் லாரிகளிலேயே கரும்பை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

பொது மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்றும், பொங்கல் படி கொடுப்பவர்கள் கார், ஆட்டோக்களில் பொருட் களை ஏற்றிக் கொண்டு சீவலப்பேரி ரோட்டுக்கு சென்று கரும்பு கட்டுகளை வாங்கிச்சென்றனர். நேற்றும் ஏராளமானோர் புதுமண தம்பதிக்கும், சகோதரிகளின் வீடுகளுக்கும் பொங்கல் படி கொண்டு சென்றனர்.

மேலும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. நெல்லை சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோவுக்கு மல்லிகை ரூ.2 ஆயிரம், பிச்சி ரூ.1,500-க்கும் விலை உயர்த்தி விற்பனை ஆனது. கனகாம்பரம் வரத்து இல்லாததால் அந்த பூக்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.

இதுதவிர ஒரு கிலோ அரளி ரூ.250, ரோஸ் ரூ.200, செவ்வந்தி -ரூ.150, வெள்ளை செவ்வந்தி -ரூ.200, கோழிக்கொண்டை ரூ.80, கேந்தி -ரூ.80 என விலை உயர்ந்து காணப்பட்டது. பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கிச்சென்றனர். இன்று (திங்கட்கிழமை) மேலும் பூக்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story