மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 9:36 PM GMT)

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொறையாறு,

தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம் பொறையாறில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், சுயம்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் வரவேற்றார். நாகை மாவட்ட துணை தலைவர் ஸ்வீட்ராஜ், சங்க கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கையை படித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு–செலவு கணக்குகளை படித்தார். இதில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 75 வயது நிரம்பிய மூத்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அளித்து வரும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு வழங்குவது போன்று மாநில அரசும் மருத்துவப்படியை ரூ.1,000 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் எந்த மருத்துவமனையிலும், எந்த நோயுக்கும் சிகிச்சை பெறலாம் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். நிறுத்தப்பட்ட தரங்கம்பாடி–மயிலாடுதுறை ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.


Next Story