தர்மபுரி குமாரசாமிபேட்டையில் ரூ.20 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட தெப்பக்குளம்


தர்மபுரி குமாரசாமிபேட்டையில் ரூ.20 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட தெப்பக்குளம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:15 PM GMT (Updated: 14 Jan 2019 5:18 PM GMT)

தர்மபுரி குமாரசாமிபேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட தெப்பக்குளம் திறக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான பழமையான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் தைப்பூச திருவிழாவின்போது தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இந்த தெப்பக்குளம் கடந்த பல ஆண்டுகளாக புதர் மண்டிய நிலையில் பராமரிப்பின்றி காணப்பட்டது. இதில் குப்பைகள் கொட்டப்பட்டதால் இந்த தெப்பக்குளத்தின் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்பட்டது.

இந்த தெப்பக்குளத்தை சீரமைக்க ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். சீரமைப்பு பணிக்காக நன்கொடை திரட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து தெப்பக்குளத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. தெப்பக்குளத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. தெப்பக்குள சீரமைப்பு பணிகள் ரூ.20 லட்சம் செலவில் 100 நாட்களில் நடைபெற்றது. குளத்தை சுற்றி பாதுகாப்பு கம்பி வேலிகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. புதிய நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சீரமைக்கப்பட்ட தெப்பக் குளத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்களை குளத்தில் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் யாகசாலை பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஊற்றப்பட்டு மகாதீபாராதனை நடை பெற்றது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story