பொங்கல் செலவுக்காக பள்ளி வார்டரை தாக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது


பொங்கல் செலவுக்காக பள்ளி வார்டரை தாக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2019 10:15 PM GMT (Updated: 14 Jan 2019 6:46 PM GMT)

பொங்கல் செலவுக்கு பணம் தரும்படி மிரட்டியதில், பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே தச்சூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதி வார்டராக வேலை செய்து வருபவர் தினேஷ் (வயது 36). இவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பொங்கல் செலவுக்கு பணம் தரும்படி தினேசை மிரட்டினார். பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்து, அதைக்கொண்டு தினேசின் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வார்டரை தாக்கி பணம் பறிக்க முயன்றதாக பஞ்செட்டியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (22) என்பவரை நேற்று கைது செய்தனர்.

Next Story