சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அறிமுகம் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கும் ‘ரோபோ’ போலீஸ்


சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அறிமுகம் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கும் ‘ரோபோ’ போலீஸ்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:15 PM GMT (Updated: 14 Jan 2019 7:09 PM GMT)

தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

அந்த வகையில் வருங்காலங்களில் வாகனங்களை இயக்கப்போகும் மாணவ-மாணவிகளுக்கு முன்கூட்டியே சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் 7-வது தளத்தில் மாணவ-மாணவிகளுக்கு என்று பிரத்யேகமாக சாலை பாதுகாப்பு காட்சி கூடம் அமைக்கப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கி கூறும் வகையில் ‘ரோடியோ’ என்ற ‘ரோபோ’ போலீசும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோவின் செயல்பாட்டையும், சாலை பாதுகாப்பு காட்சி கூடத்தையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

சாலை பாதுகாப்பு காட்சி கூடத்தில், சாலையில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சாலைகளில் இடம் பெற்றுள்ள கோடுகள், போக்குவரத்து சிக்னல் பற்றிய விளக்கங்கள் போன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்க காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்த ‘ரோபோ’வை மாணவர்கள் தான் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த போன்று மேலும் ரோபோக்கள் உருவாக்கப்படும். அவை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story