மாவட்டத்தில் தூய்மையான பள்ளிகளுக்கு பரிசு கலெக்டர் ராஜாமணி வழங்கினார்


மாவட்டத்தில் தூய்மையான பள்ளிகளுக்கு பரிசு கலெக்டர் ராஜாமணி வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jan 2019 11:23 PM GMT (Updated: 14 Jan 2019 11:23 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் தூய்மையான பள்ளிகளுக்கு பரிசுத்தொகையை கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

சோமரசம்பேட்டை,

2017-18-ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தூய்மையான பள்ளி மற்றும் தூய்மையான பாரதம் திட்டம் சார்ந்து நடந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி கலையரங்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு, சோமரசம்பேட்டை அருகே எட்டரையில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ்ரீசர், ஜீயபுரம் அருகில் உள்ள குழுமணி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மான்விழி உள்ளிட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி பேசியதாவது:-

தமிழக அரசால் சுற்றுச் சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும். 2017-2018-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூய்மையான பள்ளி மற்றும் தூய்மையான பாரதம் செயல்பாட்டில் சுத்தம், சுகாதாரம் சார்ந்து நடைபெற்ற போட்டியில் அனைத்து வகையான பள்ளிகளும் கலந்து கொண்டன. இந்த பள்ளிகளில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 48 பள்ளிகளில் மாநில அளவில் ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை மாநிலத் திட்ட அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

மீதமுள்ள 47 பள்ளிகளில் மாவட்ட அளவில் சுத்தம், சுகாதாரம் சார்ந்து முதலிடம் பிடித்த 7 பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரமும், அடுத்த நிலையில் உள்ள 40 பள்ளிகளுக்கு ரூ.5,000 வீதம் ரூ.2 லட்சமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்வாண்டில் தூய்மை பள்ளி நிகழ்வுகள் சார்ந்து நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைமன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story