தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2019 9:30 PM GMT (Updated: 16 Jan 2019 2:41 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி, 

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

கோடநாடு பிரச்சினை

கோடநாடு பிரச்சினையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துளி அளவு கூட தொடர்பு கிடையாது. இதுகுறித்து முதல்–அமைச்சரும் ஏற்கனவே விளக்கமாக தெரிவித்து உள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அது பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது. நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடித்ததால், அவருக்கு அனைத்துமே கதையாக தெரிகிறது. அவர் சினிமா போன்று நினைத்து கொண்டு அரசியல் பேசுகிறார்.

தி.மு.க. நல்ல வி‌ஷயங்களை பாராட்டியது கிடையாது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் அனைத்து அமைச்சர்களும் நேரடியாக சென்று, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டோம். இதனை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். ஆனால் அதனை தி.மு.க. பாராட்டவில்லை. அனைத்தையும் குற்றம் சொல்லியே பாராட்டு வாங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

அ.தி.மு.க. கூட்டணி

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டபோது, அதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை. இனி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெயரை சேர்க்கவும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story