நாகூரில் கடலில் மூழ்கி மாணவர் பலி ஆந்திராவை சேர்ந்தவர்


நாகூரில் கடலில் மூழ்கி மாணவர் பலி ஆந்திராவை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 4:41 PM GMT)

நாகூரில் கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

நாகூர்,

ஆந்திரா மாநிலம் சித்தூர் லாலு கார்டன் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்துடன் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக நாகூருக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் காலை நாகூர் தர்காவில் வழிபாடு செய்தார்.

தொடர்ந்து மதியம் இஸ்மாயில் தனது குடும்பத்தினருடன் நாகூரில் உள்ள கடற்கரைக்கு சென்றார். இஸ்மாயில் மகன் சபீர் (வயது16) கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலையில் சிக்கி சபீர் கடலில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் சபீரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சபீர், கடலில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

அதே பகுதியில் கரை ஒதுங்கிய அவருடைய உடலை, நாகை கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சபீர் பிளஸ்–2 படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விடுமுறையை கொண்டாட சுற்றுலா வந்த மாணவர், கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story