ஊத்துக்கோட்டை அருகே தவறவிட்ட நகை, பணத்தை மீட்டு ஒப்படைத்த விவசாயி பொதுமக்கள் பாராட்டு


ஊத்துக்கோட்டை அருகே தவறவிட்ட நகை, பணத்தை மீட்டு ஒப்படைத்த விவசாயி பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 7:53 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் அருகே உள்ள காரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). இவர் சென்னை வானகரத்தில் ஆட்டோ மொபைல் சாதனங்கள் கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது மனைவி சுமதி (32) உடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டார். ரூ.11 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் தங்க நெக்லஸ், துணிமணிகள், விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பையில் வைத்து மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கொக்கி பகுதியில் தொங்க விட்டனர்.

ஊத்துக்கோட்டையில் வந்து பார்த்தபோது நகை, பணம் வைத்திருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் தம்பதியினர் அழுது புலம்பியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த வழியே பையைத் தேடி சென்றனர்.

இந்தநிலையில் பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளரும், விவசாயியுமான பாலகிருஷ்ணன் (60) ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூரில் உள்ள நண்பர் கோபியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

நெய்வேலி கூட்டுச்சாலையில் சென்றபோது சாலையின் ஓரத்தில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்ததை பாத்தார். அதை திறந்து பார்த்தபோது தங்க நெக்லஸ், ரூ.11 ஆயிரம் ரொக்கம், செல்போன் இருந்ததை கண்டார். பின்னர் பையுடன் அவர் நண்பர் கோபியிடம் சென்று நடந்ததை கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து பையுடன் சீதஞ்சேரியில் உள்ள வக்கீல் வெஸ்லியிடம் (46) சென்று ஆலோசனை நடத்தினர்.

அவரது அறிவுரையின்படி தங்க நகை மற்றும் ரொக்கம் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்துவிட முடிவு செய்தனர். இதற்கிடையே, பையைத் தேடி சென்ற பாஸ்கர் பெரிஞ்சேரி பகுதியில் ஒரு நபரிடம் செல்போன் கேட்டு தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது போனை எடுத்து பேசிய பாலகிருஷ்ணனிடம் தனது பை காணாமல் போன விவரத்தை பாஸ்கர் விவரமாக கூறினார். இதற்கு பாலகிருஷ்ணன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் வரும்படி கூறினார். அதன்பேரில் பாஸ்கர், அவரது மனைவி சுமதி, பாலகிருஷ்ணன், கோபி, வக்கீல் வெஸ்லி ஆகியோர் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் வந்தனர்.

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலு, 4 பவுன் தங்க நெக்லஸ், ரூ.11 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பாஸ்கர் தம்பதியிடம் ஒப்படைத்தார். மனிதநேயத்துடன் நேர்மையாக நடந்து கொண்ட பாலகிருஷ்ணனை போலீஸ் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story