ராசிபுரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்


ராசிபுரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:56 PM GMT (Updated: 16 Jan 2019 11:56 PM GMT)

ராசிபுரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா, முள்ளுகுறிச்சி அருகேயுள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். விவசாயி. இவரது மகள் பரமேஸ்வரி (வயது18). மெட்டாலா அருகிலுள்ள பிலிப்பாகுட்டை தேர்பிள்ளையார்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவரது மகன் சபரீஸ்வரன் (22). இவருக்கும் பரமேஸ்வரிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பொங்கல் பண்டிகைக்கு வீட்டுக்கு வரும்படி பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் சபரீஸ்வரன் ஆகியோரை வரதராஜ் குடும்பத்தினர் அழைத்தனர். இதையொட்டி பரமேஸ்வேரி பொங்கல் பண்டிகைக்கு பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று அவரது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது கணவர் சபரீஸ்வரன் பொங்கலுக்கு மறுநாள் போகலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதையொட்டி கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த பரமேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே பரமேஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரமேஸ்வரியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சபரீஸ்வரனின் உறவினர்களும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

இந்த நிலையில் பரமேஸ்வரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கணவனை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பரமேஸ்வரி இறந்தது தொடர்பாக அவரது தாயார் சந்திரா ஆயில்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கிராமந்தி குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story