மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2019 10:30 PM GMT (Updated: 17 Jan 2019 4:38 PM GMT)

மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்,

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. முன்னதாக வெள்ளைவிநாயகர் கோவில் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர், மாநகராட்சி சாலை வழியாக ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோபால்பட்டியில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணி வித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை முன்னாள் இணை செயலாளர் சுப்பிரமணி, வேம்பார்பட்டி ஊராட்சி செயலாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். வேம்பார்பட்டி, சாணார்பட்டி, கொசவபட்டி, செங்குறிச்சி உள்பட பல பகுதிகளில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிலக்கோட்டையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். விழாவில் அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

வேடசந்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அவருடைய உருவபடத்துக்கு வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னம்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் முத்தலிப் உள்பட பலர் பங்கேற்றனர். இதே போல வேடசந்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி செண்பகனூர், அண்ணாநகர், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க. நகர செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ஜான்தாமஸ் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ஜாபர்சாதிக் வரவேற்றார். ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டுவில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பீர்முகமது முன்னிலை வகித்தார். பின்னர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story