கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை


கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2019 11:00 PM GMT (Updated: 17 Jan 2019 7:03 PM GMT)

கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

கன்னியாகுமரி,

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே நடுப்பாளையம் குருமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), பனியன் கம்பெனி தொழிலாளி. கோபி செட்டிப்பாளையம் அருகே ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த காட்டுராஜா மனைவி கார்த்திகா (26). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கார்த்திகாவுக்கும், சதீசுக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களுக்கு சென்று சந்தோசமாக இருந்தனர்.

இறுதியாக கடந்த 14-ந் தேதி கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். அன்றைய தினமும், மறுநாளும் கன்னியாகுமரியில் பல இடங்களில் கள்ளக்காதல் ஜோடி சுற்றி திரிந்தனர். பின்னர், இதேபோல் இருவரும் சந்தோசமாக இருக்க உறவினர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள், தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவெடுத்தது.

அதன்படி விடுதியில் வைத்து இருவரும் விஷ மாத்திரை தின்றும், கையில் பிளேடால் வெட்டியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கள்ளக்காதலி கார்த்திகா அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சதீஷ் உயிருக்கு போராடினார்.

உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story