ராஜபாளையம்–புளியரை நான்கு வழிச்சாலை: ‘மாற்று பாதையில் அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்’ குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அறிவிப்பு


ராஜபாளையம்–புளியரை நான்கு வழிச்சாலை: ‘மாற்று பாதையில் அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்’ குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 10:30 PM GMT (Updated: 18 Jan 2019 12:33 PM GMT)

ராஜபாளையம்–புளியரை நான்கு வழிச்சாலையை மாற்று பாதையில் அமைக்காவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர்.

நெல்லை, 

ராஜபாளையம்–புளியரை நான்கு வழிச்சாலையை மாற்று பாதையில் அமைக்காவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர்.

மழை நிலவரம்

கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவு ஆண்டுக்கு 815 மில்லி மீட்டர், ஜனவரி மாதம் இயல்பான மழை அளவு 50 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஜனவரி மாதம் 11–ந்தேதி வரை 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது அணைகளில் 63 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. பாரத பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஏற்ப இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய கோடை கால நெல் பயிருக்கு வருகிற பிப்ரவரி மாதம் 15–ந்தேதிக்குள்ளும், பருத்தி பயிருக்கு 28–ந்தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

நெல் கொள்முதல் நிலையம்

விவசாயி செல்லத்துரை பேசுகையில், ‘புளியரை பகுதியில் தற்போது நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நெல் மகசூல் குறைவாக கிடைத்துள்ளது. வியாபாரிகள் 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.1,000–க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.1,380–க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அரசு புளியரையில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றார்.

தென்காசி பகுதி விவசாயிகள் பேசுகையில், ‘தென்காசி பூ மார்க்கெட்டில் கேந்தி பூக்களை எடை போட்டு விற்பனை செய்யாமல் கையால் அள்ளிப்போட்டு விற்பனை செய்கின்றனர். இதை தடுத்து, எடைஅளவு முறையில் விற்பனை செய்ய வேண்டும்’ என்றனர். இதற்கு கலெக்டர் பதில் அளிக்கையில், தொழிலாளர் துறை மூலம் கேந்தி பூக்களை எடை போட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

காய்ந்து போன நெல் பயிர்

சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர், பெரியூர் பகுதி விவசாயிகள் காய்ந்து போன நெல் கதிருடன் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் பேசுகையில், ‘மழையை நம்பி நெல் நடவு செய்தோம். ஆனால் மானாவாரி குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் கதிர் விளையும் நேரத்தில் தண்ணீர் இன்றி பயிர் காய்ந்து போய் விட்டன. எங்கள் ஊர் பகுதியில் 300 ஏக்கர் நெல் பயிர் காய்ந்து விட்டது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்‘ என்றனர்.

தேர்தலை புறக்கணிப்போம்

நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம் சார்பில் வாசுதேவநல்லூர் பகுதி விவசாயிகள் ரசூல் மைதீன் தலைமையில் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் பேசுகையில், ‘ராஜபாளையம் –புளியரை இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்சாலைக்கு நன்செய் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் நிலத்தை அழித்து நான்கு வழிச்சாலை அமைக்கக்கூடாது. இதற்காக தரிசு நிலம் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கலாம் என்பதற்கான மாற்று வழித்திட்டத்தை ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளோம். அதன்படி நான்கு வழிச்சாலையை மாற்று பாதையில் அமைக்காவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி விவசாயிகள் ஒன்று கூடி தேர்தலை புறக்கணிப்போம்‘ என்றனர்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில், ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வழியாக அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே இருக்கும் ரோட்டை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கருத்து கேட்பு

இதற்கு கலெக்டர் ஷில்பா பதில் அளிக்கையில், ‘‘நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் விளை நிலங்களின் உரிமையாளர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்படும். அதன்பிறகு இந்த திட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இதேபோல் விவசாயிகள் கூறிய மாற்றுப்பாதையில் உள்ள பொதுமக்கள், விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்படும். அதன்பிறகே நான்கு வழிச்சாலை எந்த பாதையில் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்படும்’’ என்றார்.

கூட்ட முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அதில் திசையன்விளை எம்.எல்.தேரி விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் சுதாகர் பாலாஜி கொடுத்த மனுவில், ‘‘மணிமுத்தாறு அணையில் இருந்து 4–வது ரீச்சில் உள்ள 10–வது மடையில் 100 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளான அரசூர், இடையன்குடி, உவரி, ஆனைகுடி, கடகுளம் உள்ளிட்ட கடலோர கிராம விவசாயிகளின் நலன் கருதி அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

பாக்ஸ் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வடகரை, வாசுதவேநல்லூர் பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகளும் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம் சார்பில் வாசுதேவநல்லூர் பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க மட்டும் வந்திருப்பதாக கூறினார்கள். இதையடுத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க அவர்களை போலீசார் அனுமதித்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.


Next Story