வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம் காளைகளை அடக்கி வீரர்கள் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்


வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம் காளைகளை அடக்கி வீரர்கள் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்
x
தினத்தந்தி 18 Jan 2019 11:57 PM GMT (Updated: 18 Jan 2019 11:57 PM GMT)

வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் அருகே உள்ள வடமலாப்பூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி வடமலாப்பூரில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வாடிவாசலில் இருந்து முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 103-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 596-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடிவீரர்கள் வத்தனக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), மச்சுவாடியை சேர்ந்த ராம்குமார் (21), பணங்குடியை சேர்ந்த சரத்குமார் (25), செல்லுகுடியை சேர்ந்த ராஜசேகரன் (24), குடுமியான்மலையை சேர்ந்த கணேசன் (45) மற்றும் பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வேட்டி, குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள், கட்டில் போன்ற பரிசுகள் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வடமலாப்பூர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.


Next Story