வெவ்வேறு பகுதிகளில் 2 தொழிலாளிகள் தற்கொலை


வெவ்வேறு பகுதிகளில் 2 தொழிலாளிகள் தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2019 10:15 PM GMT (Updated: 20 Jan 2019 7:45 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(வயது 38). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வேணுகோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவருடைய மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த வேணுகோபால் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வேணுகோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல மங்களமேட்டை அடுத்துள்ள அனுக் கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(58). கூலித்தொழிலாளி. இவருக்கு கொளஞ்சி, மலர் ஆகிய 2 மனைவிகளும், 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஜெகநாதன் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட ஜெகநாதன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெகநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story