நாகியம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு


நாகியம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 8:52 PM GMT)

நாகியம்பட்டியில் இன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நாகியம்பட்டியில் இன்று (திங்கட் கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரோகிணி நேற்று நாகியம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வு முடிவில் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடல் தகுதியை ஆய்வு செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு தகுதி பெற்றது என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.

காளைகள் ஊக்குவிப்பு மருந்துகளோ, போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளதா? என்பதை சோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத்திடல் அருகில் போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகளில் மிளகாய்ப்பொடி தடவுதல், சகதி தடவுதல், மூக்குப்பொடி தடவுதல் போன்ற தகாத செயல்களால் அவைகளை வெறியூட்டச் செய்யாதிருத்தலை உறுதி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்னர் 20 நிமிடத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தப்படுவதுடன் மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் இடவசதியுடன் 100 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட வேண்டும்.

மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், தீவனம், மற்றும் நிழலுக்காக துணிப்பந்தல் அல்லது கூரையால் வேயப்பட்ட பந்தல் போன்ற வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக் கூடாது. காயம் இருந்தால் விதிமுறைகளின்படி, அந்த காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளை கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித்துறையினரிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவி குதித்து வராத வண்ணம் குறைந்த பட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்கவும், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து எந்தவிதமான பாதிப்புகள் இல்லாமல் பங்கேற்க தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story