பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 7:26 PM GMT)

பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்கால் பொதுப் பணித்துறையில் காலியாக உள்ள தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொறியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். செயல்திறன் மிக்க அரசு செயலாளரிடம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.

முறையான பணி மாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பதவிகளையும் பணிகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெறும் என காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி காரைக்காலில் நேற்று பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க இணை செயலாளர் சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். இணை பொருளாளர் கோபால்சாமி முன்னிலை வகித்தார்.

அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். இதில் பொறியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story