திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்துக்கொன்ற மூதாட்டி


திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்துக்கொன்ற மூதாட்டி
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 7:50 PM GMT)

திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை உருட்டு கட்டையால் அடித்து மூதாட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 40),. கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இவரது மனைவி வேம்பரசி, பொங்கல் பண்டிகை அன்று கணவன் மீது உள்ள கோபத்தால் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கருப்பையன் நேற்று முன்தினம் இரவுவழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் மாரியம்மாளுடனும்(65), தந்தை கரும்பாயிரத்துடனும் சண்டை போட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாயார் மாரியம்மாள், அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக கருப்பையனை தாக்கினார். இந்த தாக்குதலில் அந்த இடத்திலேயே கருப்பையன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையனின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மகனை அடித்துக்கொன்ற தாய் மாரியம்மாளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கருப்பையனுக்கு 10-வது படிக்கும் ஹரிஹரன் என்ற மகனும், 7-வது படிக்கும் கலையரசன் என்ற மகனும் உள்ளனர்.

குடித்து விட்டு தகராறு செய்த மகனை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story