திருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ரூ.10½ லட்சம் குட்கா பறிமுதல் குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது


திருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ரூ.10½ லட்சம் குட்கா பறிமுதல் குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 7:55 PM GMT)

திருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.10½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மளிகை பொருட்கள் எனக்கூறி குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் அவற்றை விற்பனை செய்வதற்கு அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்ததாக ஒருபுறம் வழக்கு நடந்து வருகிறது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் லாரிகள் முழுமையாக சோதனைச்சாவடிகளில் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த கடுமையான சோதனையையும் மீறி தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பகிரங்கமாக விற்கப்படாமல் ரகசியமாக இன்னமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் விற்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் மற்றும் போலீசாரால் சோதனை செய்யப்பட்டு டன் கணக்கில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக சோதனை நடத்துவது கைவிடப்பட்டது.

திருச்சி பெரியகடை வீதி பகுதியில் வடநாட்டு வியாபாரிகள் சிலர், கடை வைத்து தொழில் செய்து வருகிறார்கள். சிலர் அப்பகுதியில் வாடகைக்கு குடோன்களை எடுத்து அதில் மளிகை பொருட்களை வைத்திருப்பதாக கூறி, குட்கா உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மற்றும் கோட்டை போலீசாருக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சக்திவேல் மற்றும் போலீசார் பெரியகடை வீதியில் உள்ள சாகர் டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடைநடத்தும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மங்கள்ராம் (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அதே பெரியகடை வீதியில் தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து அங்கு மளிகை பொருட்கள் வைத்திருப்பதாக கூறி, மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். உடனடியாக அந்த குடோனுக்கு சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு 1 டன் அளவுக்கு போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மினி சரக்கு லாரி மூலம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். அதைத்தொடர்ந்து வியாபாரி மங்கள்ராமை போலீசார் கைது செய்தனர். இந்த போதை பொருட்களை கரூரில் இருந்து வியாபாரி ஒருவரிடம் மொத்தமாக வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியகடை வீதி, தென்னூர், உறையூர், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் போலீசாரும் அதிகாரிகளும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பாலக்கரை துரைசாமிபுரத்தில் ஒரு வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி, போதைப்பொருட்களை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததாக திருப்பதி என்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 2½ டன் எடையுள்ள ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் திருச்சி நடுகுஜிலி தெருவில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது அங்கு ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பதுக்கியதாக பவன்குமார் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் காந்திமார்க்கெட் அருகில் உள்ள கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் உள்ள பெட்டிக் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

Next Story