தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:03 PM GMT)

தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி நகர், பட்டேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சில நேரங்களில் வரும் குடிநீரும் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதி அடைந்தனர்.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி குடிநீர் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று குடிநீர் கேட்டு தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள், கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை பாட்டில்களில் பிடித்து வந்து இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story