நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி குண்டடம் அருகே கொடூர சம்பவம்


நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி குண்டடம் அருகே கொடூர சம்பவம்
x
தினத்தந்தி 22 Jan 2019 12:00 AM GMT (Updated: 21 Jan 2019 9:39 PM GMT)

குண்டடம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரது கணவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே உள்ள மரவாபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41), கூலித்தொழிலாளி. இவரது மனைவி துளசிமணி (38). இவர்களுக்கு பூங்கொடி (19) என்ற மகளும், கோகுல்கிருஷ்ணன் (14) என்ற மகனும் உள்ளனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அவருக்கு தனது மனைவி துளசிமணியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் செந்தில்குமாரின் மனைவி மற்றும் அவரது மகள், மகன் ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது செந்தில்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி, சாப்பிடுவதற்கு உணவு தருமாறு கேட்டுள்ளார். துளசிமணி படுக்கையில் இருந்து எழுந்ததும், செந்தில்குமார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருக்கும் மகள், மகன் விழித்துக்கொள்வார்கள் என்பதால், துளசிமணி வீட்டிற்கு வெளியே வந்து அமர்ந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து செந்தில்குமாரும் வீட்டிற்கு வெளியே வந்து, திண்ணையில் அமர்ந்திருந்த துளசிமணியிடம் தகராறு செய்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், செந்தில்குமாரின் சத்தத்தை கேட்டு, அவர் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தனர். இதனால் கணவன்–மனைவியை சமாதானப்படுத்த யாரும் வரவில்லை.

நீண்ட நேரம் தகராறில் ஈடுபட்டு வந்த செந்தில்குமாருக்கு திடீரென்று ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் தனது மனைவியை கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில், மனைவியின் வாயை பொத்தினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், துளசிமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு கத்தியை அதே இடத்தில் போட்டுவிட்டு, செந்தில்குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

அதுவரை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த செந்தில்குமாரின் குழந்தைகள் நீண்ட நேரமாகியும் அம்மா துளசிமணியை காணவில்லையே என்று நினைத்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது துளசிமணி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அவர்களின் கதறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக இது குறித்து, குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துளசிமணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்குமாரை தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story