குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 9:54 PM GMT)

மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகள் 8 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் உதவித்தொகையை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிகடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 232 மனுக்களை பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகள் 8 பேருக்கு மறுவாழ்வு உதவித்தொகையாக தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story