9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:00 PM GMT (Updated: 22 Jan 2019 7:41 PM GMT)

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணை யான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிட்லப்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாநில அரசை கண்டித்து குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்திலே பல பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் காரணம் இன்றைக்கு ஆரம்பித்து இருக்கின்ற தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமாகும். மூன்று ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆனால் அரசு எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்லி அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இதே நிலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த பள்ளிகளையும் இழுத்து மூடும் நிலை வரும். 9 அம்ச கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை விலக்கிகொள்வோம் என்று கூறினார்.

இதேபோல் ஆவடி தாசில்தார் அலுவலகம் எதிரே நேற்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட துணைத்தலைவர் குப்புராஜ் தலைமை தாங்கினார். பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராஜி, தியாகு, ஷேக் கபூர், கணேசன், ரெக்ஸ் உள்ளிட்ட ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளியை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுடன் வருவாய்த்துறை ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story