சிவக்குமார சுவாமி மறைவு: துமகூருவில் முஸ்லிம் அமைப்பினர் அஞ்சலி


சிவக்குமார சுவாமி மறைவு: துமகூருவில் முஸ்லிம் அமைப்பினர் அஞ்சலி
x
தினத்தந்தி 22 Jan 2019 10:51 PM GMT (Updated: 22 Jan 2019 10:51 PM GMT)

சிவக்குமார சுவாமியின் மறைவையொட்டி துமகூருவில் அவருடைய உருவப்படத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

துமகூரு,

துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவக்குமார சுவாமி. 111 வயதான அவர் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிவக்குமார சுவாமி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருடைய மரண செய்தி கேட்டதும் அவருடைய பக்தர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவர்கள் துமகூருவில் குவிந்துள்ளனர். நேற்று மாலை மடாதிபதி சிவக்குமார சுவாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய மறைவையொட்டி மாநிலம் முழுவதும் ஏராளமான மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். துமகூருவுக்கு செல்ல முடியாதவர்கள் அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவருடைய மறைவுக்கு துமகூருவில் முஸ்லிம் அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் நேற்று துமகூரு டவுனில் மடாதிபதி சிவக்குமார சுவாமியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், இந்து மதத்தை சேர்ந்த மடாதிபதியாக இருந்தாலும், சிவக்குமார சுவாமி மதசார்பற்ற நிலையை தான் விரும்பினார். அவர் அனைத்து மத மக்களுக்கும் பொதுவானர்.

அவருடைய கல்வி நிலையத்தில் ஏராளமான இஸ்லாமிய குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார். இதனால் மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறினர். மடாதிபதி சிவக்குமார சுவாமி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த துமகூருவுக்கு வரும் பக்தர்களுக்கு முஸ்லிம் அமைப்பினர் காலை உணவு வழங்கினர்.

Next Story