கல்வியோடு திறமையும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் கலெக்டர் கந்தசாமி பேச்சு


கல்வியோடு திறமையும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் கலெக்டர் கந்தசாமி பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2019 10:45 PM GMT (Updated: 23 Jan 2019 1:42 PM GMT)

கல்வியோடு திறமையும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கை கலெக்டர் கந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:–

வாழ்க்கை சவால் நிறைந்தது. போட்டி நிறைந்த இவ்வுலகில் சிரமங்களைத் தாண்டி சாதனைகள் புரிந்திட வேண்டும். வாழ்வில் உயர கடின உழைப்பு தேவையில்லை, அறிவுப்பூர்வமான உழைப்புதான் தேவை. காலத்தால் அழிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே. கல்வியோடு திறமையும் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். உன்னை நீ இவ்வுலகிற்கு அடையாளம் காட்ட வேண்டிய தருணம் இது. போட்டி நிறைந்த இவ்வுலகில் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெற வேண்டும்.

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்று உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்பதற்காகவே இம்மாதிரியான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் கலந்துகொண்டு நீங்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குனர் மீனாட்சி, துணை இயக்குனர் தேவேந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை, சன் கலை மற்றும் அறிவியில் கல்லூரி செயலாளர் எஸ்.சீனுவாசன், முதல்வர் சிவக்குமார், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.


Next Story