மார்த்தாண்டம் அருகே கணவர் வீட்டு முன் மகனுடன் இளம்பெண் தர்ணா


மார்த்தாண்டம் அருகே கணவர் வீட்டு முன் மகனுடன் இளம்பெண் தர்ணா
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 2:39 PM GMT)

மார்த்தாண்டம் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகனுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் விரிகோடு முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவருடைய மகள் ரமா (வயது 24). இவருக்கும், மார்த்தாண்டம் அருகே கோட்டகம் செம்பக்காவிளையை சேர்ந்த மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 2016–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மகேஷ் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

திருமணம் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், மகேஷ் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால், ரமா மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 2 பேரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

பின்னர், மகேஷ், வேலைக்காக வெளிநாடு சென்றார். ஆனால், குடும்ப செலவுக்கு பணம் அனுப்பவில்லை. இதனால் ரமா, அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று தங்கினார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகேஷ் ஊர் திரும்பினார். ஆனால் அவர், மனைவியை சந்திக்கவில்லை. இதனால், ரமா கணவர் வெளிநாட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே மகேஷின் பெற்றோர் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்ததாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த ரமா, நேற்று கணவரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் மகேஷின் பெற்றோர், அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால், அதிர்ச்சி அடைந்த ரமா, தனது மகனுடன் கணவர் வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 மேலும், இதுகுறித்து ரமாவின் தாயார் மகேஸ்வரி மார்த்தாண்டம் போலீசில் தனது மகளை கணவருடன் சேர்த்து வைக்கும்படி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story