நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் திருச்சி மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் திருச்சி மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2019 11:15 PM GMT (Updated: 23 Jan 2019 8:03 PM GMT)

பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்என திருச்சி மாநாட்டில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

இந்த மாநாட்டை தடை செய்ய சனாதன சக்திகள் முயற்சி செய்தனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை. நாட்டை காக்க அனைவரும் ஒன்று திரண்டுள்ளோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் 4½ ஆண்டு கால ஆட்சியில் தலித், சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்சியாக திகழ்கிறது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ.க.வினர் நினைக்கின்றனர். ஆனால் ஒரு போதும் நடக்கவிடாமல் தடுப்போம். சனாதனத்தை வேரறுப்போம்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து சனாதனத்தை நாடு முழுவதும் கொண்டு வர முயற்சிக்கிறது. தமிழகம் பெரியார் மண். அம்பேத்கரின் கொள்கைகளை கொண்டது. அவர்களால் (பா.ஜ.க.) தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்கின்றனர்.

இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியதற்காக மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். தான். மதவாத சக்திகள் சாதி உணர்வை தூண்டி இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் ஒரு சிலர் அறியாமையால் அடிமையாகி விடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவர்கள் எட்டிப்பார்த்தனர். ஆனால் இங்கிருப்பது சிறுத்தை என தெரிந்ததும் ஓடிவிட்டனர்.

சனாதனத்தை வேரறுப்போம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story