‘ராகுல்காந்தி பிரதமராவது உறுதி’ காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் பேட்டி


‘ராகுல்காந்தி பிரதமராவது உறுதி’ காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2019 10:15 PM GMT (Updated: 23 Jan 2019 8:49 PM GMT)

ராகுல்காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டதாக ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர் சாதிக், வட்டார தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டு பேசினார். இதில் சக்தி என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ்ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், மாதேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாஷா, நிர்வாகிகள் முகமது அர்சத், விஜயபாஸ்கர், புவனேஸ்வரி, பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பயிற்சி கூட்டம் ஈரோடு பூந்துறைரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, முன்னாள் மேயர் வெங்கடாசலம், அருள்பெத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வர உள்ளதால் காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் 484 வாக்குச்சாவடி குழுக்களும், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 553 வாக்குச்சாவடி குழுக்களும் உள்ளன. ‘சக்தி’ என்கிற செயலி புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கட்சியினர் கருத்துகளை நேரடியாக காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கலாம். மேலும், கருத்துகளை பதிவு செய்வதன் மூலமாக ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் தெரிவிக்கப்படும். மேலும், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை, ஊழல், முறைகேடு குறித்து மக்களிடம் எடுத்து சொல்லப்படும். மாநில அளவில் சிறப்பாக செயல்படும் 10 பேரை தேர்வு செய்து ராகுல்காந்தியை நேரில் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வட்டார தலைவர்கள் முத்துகுமார், கோபாலகிருஷ்ணன், பழனிசாமி, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story