பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால் பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால் பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2019 11:15 PM GMT (Updated: 23 Jan 2019 9:20 PM GMT)

பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால் பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை ராஜா தியேட்டர் சந்திப்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பல ஆண்டுகளாக விரும்பினர். நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் பிரியங்கா காந்திக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.

2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசமும் அதில் ஒரு வியூகம். இந்திய அரசியலில் இந்திரா காந்தி முத்திரை பதித்தார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் நாட்டுக்காக உழைத்தனர். நாட்டின் நலன், பாதுகாப்பு, ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

தியாக குடும்பத்தில் இருந்து வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் கட்சியை வழிநடத்துவது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலம். 2019-ல் காங்கிரஸ் கட்சி வலுவான இயக்கமாக மாறும். பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தால் பா.ஜ.க.வுக்கு காய்ச்சல், பயம் வந்து விட்டது. பா.ஜ.க.வினர் இப்போது உளர தொடங்கியுள்ளனர்.

நடை, உடை, பாவனையில் இந்திரா காந்தியை போல பிரியங்கா காந்தியும் இருப்பதால் இந்திராவை பார்ப்பது போல மக்கள் உணர்கின்றனர். தனக்கு கொடுத்த பொறுப்பை பிரியங்கா காந்தி சிறப்பாக செய்வார். தேசிய அளவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்பார்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story