அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க முயன்ற 30 பேர் கைது


அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க முயன்ற 30 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 10:45 PM GMT (Updated: 24 Jan 2019 5:31 PM GMT)

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குண்டும், குழியுமான பூந்தமல்லி நெடுஞ்சாலையை சீரமைக்க முயன்ற பொதுமக்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி வரையிலான பூந்தமல்லி நெடுஞ் சாலையில் நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி உள்ளிட்ட இடங்களில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.

இதனை சீரமைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வாகன ஓட்டிகள் பலமுறை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து சாலையை சீரமைக்காத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர். ஆனால் இதுவரையிலும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாள்தோறும் வாகன விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். கடுமையான போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுர வாயல் குடியிருப்போர் சங்கம், மக்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் யுவராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் வேலப்பன்சாவடி பகுதியில் குண்டும், குழியுமான பூந்தமல்லி நெடுஞ்சாலையை சீரமைக்க முடிவு செய்தனர்.

இதற்காக 4 லோடு ஜல்லிக்கல் மண் கலவை வரவழைக்கப்பட்டு சாலையில் மோசமான பகுதிகள், குண்டும் குழியுமான இடங்களில் மண்ணை நிரப்பி சாலையை சீரமைக்க முயன்றனர். அதற்குள் அங்கு வந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையிலான திருவேற்காடு போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சாலையை சீரமைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து சாலையை சீரமைக்க முயன்ற பொதுமக்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

Next Story