சேலத்தில் நாளை குடியரசு தினவிழா: கலெக்டர் ரோகிணி தேசிய கொடியேற்றுகிறார்


சேலத்தில் நாளை குடியரசு தினவிழா: கலெக்டர் ரோகிணி தேசிய கொடியேற்றுகிறார்
x
தினத்தந்தி 24 Jan 2019 10:45 PM GMT (Updated: 24 Jan 2019 9:35 PM GMT)

சேலத்தில் நாளை (சனிக் கிழமை) நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலெக்டர் ரோகிணி தேசிய கொடியேற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

சேலம்,

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை காலை 8 மணிக்கு நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். பின்னர், அவர் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்குகிறார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கதர் ஆடை, பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கடந்த ஒரு வாரமாக ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே, குடியரசு தினவிழா நடைபெறும் காந்தி மைதானத்தில் இறுதிக்கட்ட ஒத்திகை நேற்று காலை நடைபெற்றது. அப்போது, போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பில் மரியாதை செலுத்துவது பற்றி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகளும் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தடுப்பு வேலி, அலங்கார வளைவு, பார்வையாளர்கள் அமரும் இடம், கலை நிகழ்ச்சியில் இடம்பெறும் மாணவ-மாணவிகள் அமரும் இடம், தண்ணீர் வசதி உள்ளிட்டவை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, சேலத்தில் குடியரசு தினவிழா நடக்கும் காந்தி விளையாட்டு மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 700 போலீசார் குடியரசு தினவிழா பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் சோதனை நடத்தி அங்கு சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என கண்காணித்து வருகிறார்கள். பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story