திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக சாலை மறியல்


திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2019 10:45 PM GMT (Updated: 25 Jan 2019 6:10 PM GMT)

திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 800 பெண்கள் உள்பட 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

5 ஆயிரம் பள்ளிகள் மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 4-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சோமசுந்தரம், ரவி, ஈவேரா, துரைராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 800 பெண்கள் உள்பட 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story